Sunday, August 21, 2011

அஜித்துக்கு போட்டி விஜய்தான்: ஷாலினி

குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக மாறியவர் ஷாலினி. 'அமர்க்களம்' படத்தில் அஜித்துடன் நடித்த போது, அவர்களுக்குள் காதல் மலரவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அனோஷ்கா என்ற அழகான மகளை பெற்றெடுத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஷாலினி குடும்பத்தலைவியாகவும், இறகுப்பந்து வீராங்கனையாகவும திகழ்கிறார். சிலதினங்களுக்கு முன்பு, தேனியில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஷாலினி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அஜித்-விஜய் போட்டி பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை அப்படியே உங்களிடம்... "சினிமாவில் அஜித்துக்கும் விஜயக்கும் போட்டிதான். அது ஆரோக்கியமான போட்டி. ஆரோக்கியமான போட்டி நல்லதுதான். எதிலும் போட்டி இருக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நானும் விஜய்யின் மனைவியும் நல்ல தோழிகள். எங்க ரெண்டு பேரோட குழந்தைகளும் அப்படித்தான்." என்றார். அதுசரி... ஊருக்கே தெரிஞ்ச விஷயத்த பறந்து பறந்து சொல்லுதுப்பா இந்த சிட்டுக்குருவி.....

நண்பன் குழுவினருக்கு விஜய் விருந்து!

நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய்.
இந்தியில் கலக்கிய ’3 இடியட்ஸ்’ படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்தளித்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக போனது அன்றைய மாலைப் பொழுது.
விருந்துக்கு வந்த எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.

சீமானை தள்ளிவிட்டு இடையில் நுழைந்த விஜய்.!

மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது தெய்வ திருமகள் இயக்குனர் விஜய்க்கு. ’சுட்டுக்’ கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.

தெய்வ திருமகள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜீத்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜீத்தின் பில்லா-2 வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜீத்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யூடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று.
நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் நண்பன் முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கவுதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது.
திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!

விஜய் நடிக்கும் 'யோஹன்' - லேட்டஸ்ட் நியூஸ்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் - அத்தியாயம் ஒன்று'. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2012- முதல் நடைபெற இருக்கிறது என்பது எல்லாம் பழைய விஷயம். தற்போது இப்படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இப்படம் மிகப்பெரிய வங்கி கொள்ளை பற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, 'மதராசபட்டினம்' படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். எமி ஜாக்சன் தற்போது 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விஜய்யின் நடிப்பில் மட்டுமின்றி, திரையுலக வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஜய் தரப்பு நம்பி வருகிறதாம்.

Tuesday, August 2, 2011

ஆகஸ்ட் 15ல் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு

விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தின் இசையை மிக பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கேரளா விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி இப்படம் வெளிவரும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் இப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொந்தமாக வெளியிட இருக்கிறாராம். கமல் நடித்த 'தசாவதாரம்', விக்ரம் நடித்த 'அந்நியன்' போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் சொந்தமாக வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். அதைப் போலவே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'வேலாயுதம்' படத்தில் வரும் முதல் பாடல் மற்றும் இறுதி சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு ஆன செலவே பல கோடிகள் என்கிறது படக்குழு.

Monday, August 1, 2011

விஜய்க்கு அதிரடி அத்தியாயம் எழுதிய கௌதம் மேனன்!










இளைய தளபதி விஜய் தற்போது 'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு 'யோஹன்-அத்தியாயம் ஒன்று' என்று பெயரிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கேதோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கமும் தயாரிப்பாளரான கௌதம் மேனன்தான். இப்படத்தின் விளம்பரத்தினை பார்த்தால் இது தொடர்வரிசை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதில் 'ஒன்றாம் குறிக்கோள் - நியூயார்க்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து இரண்டாம் குறிக்கோள், மூன்றாம் குறிக்கோளை வைத்து படவரிசை வரலாம் எனத் தெரிகிறது. 2012-ல் அதிரடி ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெற இருக்கிறதாம்.